Saturday, May 16, 2009

26 : புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -----------------------------01


தன்னுடல் வளர்ப்பதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்பவன் இடத்தில் அன்பும் அருளும் எப்படி இருக்க முடியும் ? ஒரு நாளும் அருள் பிறக்க வழி இல்லை. உயிர்க்கொலை கொடிது.

பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.----------------------02


பொருளைப் போற்றிப் பாதுகாக்கும் திறன் அதன் பயன் அறியார்க்கு இல்லை. ஊன் தின்பவனுக்கு உயிரைக் காக்கும் அருட்தன்மை இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.---------------------------03

படைக்கருவி கொண்டவன் நெஞ்சம் உயிர்க்கொலை ஒன்றையே நோக்கி அன்பினை மறத்தல் போல், உடல்சுவை ஒன்றையே கருதி ஊனுண்பவன் அருளை மறக்கின்றான்.

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.-----------------------04


அன்புடமை என்பது உயிர்க்கொலை செய்யாதிருத்தல். உயிர்களைக் கொல்லுதல் அருளுடைமை அன்று. அதுவும் அவ்வூனை உண்பது நற்செயல் அன்று.


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. ----------------------05


ஊனுண்ணாதிருப்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அந்நிலை மறந்து ஊனுண்பவனை நரகம் கூட விழுங்காது. நரகத்திலும் கொடியது ஊனுண்ணுதல்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.-------------06


தின்பதற்காக உயிர்க்கொலை செய்பவன் இல்லை என்றால் விற்பதற்காக உயிர்க்கொலை செய்வாரும் இல்லை. உண்பவன் இருப்பதால் தான் விற்பவனும் கொல்கின்றான்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.---------------------------07

பிறிதொரு உயிரின் உடற்புண் என்றுணர்ந்து புலால் உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.-----------------------------08

தெளிந்த அறிவுடையார் உயிரை இழந்த உடலின் ஊனை உண்ண ஒருநாளும் விரும்பார். அறிவுடைமை என்பது உயிர்க்கொலை செய்யாமை.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று..------------------------09

அவிப்பொருள் அளித்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடச் சிறந்தது ஒரு உயிரை அழித்து அதன் உடல் உண்ணாதிருத்தல்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.---------------------------------10

உயிர்க்கொலை செய்யாதவனை, ஊனுணவை உண்ணாதவனை உலகத்து உயிர்கள் எல்லாம் நெஞ்சாரப் போற்றி வணங்கும்.

செல்வி ஷங்கர்
-----------------------

















Sunday, May 3, 2009

25 : அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள ! ...................................... 01
செல்வத்துள் சிறந்த செல்வம் அருட்செல்வம். மற்ற பொருட்செல்வம் எல்லாம் இழிவானவர்களிடம் கூட இருக்கலாம்.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை ! ................................... 02
எப்படிப்பார்த்தலும் சரி - அருளே வாழ்வுக்குத் துணையாகும். எனவே நல்ல வழிகளை நாடி அருட்செயல் புரிதல் வேண்டும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் ! ...................................... 03
நெஞ்சம் கனியும் அருளுடையார்க்கு துன்பம் நிறைந்த இருள் உலகம் எப்போதுமில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ! ...............................04
பிற உயிர்களை அன்போடு காத்து அருள் செய்வார்க்கு தன்னுயிர் அஞ்சும் படியான துயர் எப்போதும் இல்லை.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ! .....................................05
அன்போடும் அறிவோடும் வாழ்வார்க்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த வளமான பூமியே சான்றாகும். காற்றும் மழையும் இயற்கை வளமும் நாம் கேட்டு வருவதில்லையே !

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் ! ..........................06
அன்பின்றி அருள் மறந்து அல்லவை செய்பவர்கள் வாழ்வின் பயனிழந்தவர்கள் ஆவர்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு! ............................ 07
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல் அருளில்லார்க்கு வாழ்வில் புக்ழ் இன்பம் இல்லாது போகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது ! ...................................08
செல்வ வளம் இல்லாதவர் ஒரு காலத்து வளம் பெற்று வாழலாம். ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் நலம் பெற்று வாழ இயலாது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் . ................................09
அன்பும் அறிவும் இல்லாதவன் நல்வாழ்வு வாழ்தல் என்பது அறிவுத் தெளிவற்றவன் மெய்ப்பொருள் ஆய்தல் போன்றது.

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. .........................10
நாம் நம்மை விட மெலியாரிடம் செல்லும் போது நாம் நம்மில் வலியார் முன் சென்றால் என்ன ஆவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது நெஞ்சில் வேண்டும்.

செல்விஷங்கர்