Monday, October 5, 2009

27 :தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு ...........................................01

தனக்கு வரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்வதும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதுமே தவம் எனப்படும்.

தவமும் தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார் மேற்கொள் வது .................................02

நல்லவராக இருப்பதும் நல்லொழுக்கம் மேற்கொள்வதும் தவமுடையார்க்கு அழகாகும். அஃதில்லாதவர் அவ்வாறு நடிப்பது தவறே ஆகும்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்........................................03

தவம் செய்வார்க்கு தானம் செய்ய வேண்டியே மற்றவர்கள் தவம் மேற்கொள்வதில்லை.

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் ..............................04

துன்பம் செய்பவர்களைப் பொறுத்துக் கொள்ளுதலும் அன்பு செய்தாரைப் போற்றுதலும் தவத்தால் வரும் பண்பு

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.........................................05

நினைத்ததை நினைத்தவாறு பெறவே தவச் செயல் எல்லோராலும் மேற்கொள்ளப் படுகிறது. இடை விடா முயற்சியே தவம்

தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு ....................06

தவம் மேற்கொள்பவர்களே தம் கடமையைச் செய்பவர்கள். மற்றவர்களெல்லாம் ஆசையால் பயனற்ற செயல்களைச் செய்பவர்களே ஆவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு...........................07

பொன்னைச் சுடச்சுட தரம் உயர்ந்து ஒளி வீசுவது போல் தவமேற்கொள்வார்
தன் துன்பம் நீங்கி அறிவொளி வீசுவர்.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மண்ணுயிர் எல்லாம் தொழும்.....................08

தன்னலப் பற்றற்றவனை தன்னுயிரும் பிறர்க்கே என்று எண்ணு பவனை எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு......................09

தவம் மேம்பட்ட ஒழுக்கம் உடையாரை எமனும்நெருங்க முடியாது. தன்னுயிரும் பிறர்க்கே என்ற விடாமுயற்சி உடையானிடம் உயிர் கொல்லும் எமனுக்கு ஒரு வேலையும் இல்லை.

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்..............................10

உலகில் வறியவர் பலராக இருப்பதற்குக் காரணம் தவ உணர்வுடையார் சிலராகவும் அவ்வுணர்வற்றார் பலராகவும் இருப்பதுவே . விடா முயற்சிஉடைய செயல்களே வெற்றியைத் தேடித் தரும்.

செல்வி ஷங்கர்

Saturday, May 16, 2009

26 : புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். -----------------------------01


தன்னுடல் வளர்ப்பதற்கு பிற உயிர்களைக் கொன்று உண்பவன் இடத்தில் அன்பும் அருளும் எப்படி இருக்க முடியும் ? ஒரு நாளும் அருள் பிறக்க வழி இல்லை. உயிர்க்கொலை கொடிது.

பொருளாட்சி போற்றாதர்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.----------------------02


பொருளைப் போற்றிப் பாதுகாக்கும் திறன் அதன் பயன் அறியார்க்கு இல்லை. ஊன் தின்பவனுக்கு உயிரைக் காக்கும் அருட்தன்மை இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.---------------------------03

படைக்கருவி கொண்டவன் நெஞ்சம் உயிர்க்கொலை ஒன்றையே நோக்கி அன்பினை மறத்தல் போல், உடல்சுவை ஒன்றையே கருதி ஊனுண்பவன் அருளை மறக்கின்றான்.

அருளல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.-----------------------04


அன்புடமை என்பது உயிர்க்கொலை செய்யாதிருத்தல். உயிர்களைக் கொல்லுதல் அருளுடைமை அன்று. அதுவும் அவ்வூனை உண்பது நற்செயல் அன்று.


உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. ----------------------05


ஊனுண்ணாதிருப்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன். அந்நிலை மறந்து ஊனுண்பவனை நரகம் கூட விழுங்காது. நரகத்திலும் கொடியது ஊனுண்ணுதல்.


தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.-------------06


தின்பதற்காக உயிர்க்கொலை செய்பவன் இல்லை என்றால் விற்பதற்காக உயிர்க்கொலை செய்வாரும் இல்லை. உண்பவன் இருப்பதால் தான் விற்பவனும் கொல்கின்றான்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.---------------------------07

பிறிதொரு உயிரின் உடற்புண் என்றுணர்ந்து புலால் உண்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.-----------------------------08

தெளிந்த அறிவுடையார் உயிரை இழந்த உடலின் ஊனை உண்ண ஒருநாளும் விரும்பார். அறிவுடைமை என்பது உயிர்க்கொலை செய்யாமை.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று..------------------------09

அவிப்பொருள் அளித்து ஆயிரம் வேள்விகள் செய்வதை விடச் சிறந்தது ஒரு உயிரை அழித்து அதன் உடல் உண்ணாதிருத்தல்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.---------------------------------10

உயிர்க்கொலை செய்யாதவனை, ஊனுணவை உண்ணாதவனை உலகத்து உயிர்கள் எல்லாம் நெஞ்சாரப் போற்றி வணங்கும்.

செல்வி ஷங்கர்
-----------------------

















Sunday, May 3, 2009

25 : அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள ! ...................................... 01
செல்வத்துள் சிறந்த செல்வம் அருட்செல்வம். மற்ற பொருட்செல்வம் எல்லாம் இழிவானவர்களிடம் கூட இருக்கலாம்.

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்
தேரினும் அஃதே துணை ! ................................... 02
எப்படிப்பார்த்தலும் சரி - அருளே வாழ்வுக்குத் துணையாகும். எனவே நல்ல வழிகளை நாடி அருட்செயல் புரிதல் வேண்டும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல் ! ...................................... 03
நெஞ்சம் கனியும் அருளுடையார்க்கு துன்பம் நிறைந்த இருள் உலகம் எப்போதுமில்லை.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை ! ...............................04
பிற உயிர்களை அன்போடு காத்து அருள் செய்வார்க்கு தன்னுயிர் அஞ்சும் படியான துயர் எப்போதும் இல்லை.

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி ! .....................................05
அன்போடும் அறிவோடும் வாழ்வார்க்குத் துன்பமில்லை என்பதற்கு இந்த வளமான பூமியே சான்றாகும். காற்றும் மழையும் இயற்கை வளமும் நாம் கேட்டு வருவதில்லையே !

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார் ! ..........................06
அன்பின்றி அருள் மறந்து அல்லவை செய்பவர்கள் வாழ்வின் பயனிழந்தவர்கள் ஆவர்.

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு! ............................ 07
பொருளில்லாதவர்க்கு இவ்வுலக இன்பம் இல்லாதது போல் அருளில்லார்க்கு வாழ்வில் புக்ழ் இன்பம் இல்லாது போகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது ! ...................................08
செல்வ வளம் இல்லாதவர் ஒரு காலத்து வளம் பெற்று வாழலாம். ஆனால் அருளில்லாதவர் ஒரு நாளும் நலம் பெற்று வாழ இயலாது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் . ................................09
அன்பும் அறிவும் இல்லாதவன் நல்வாழ்வு வாழ்தல் என்பது அறிவுத் தெளிவற்றவன் மெய்ப்பொருள் ஆய்தல் போன்றது.

வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின்
மெலியார்மேல் செல்லும் இடத்து. .........................10
நாம் நம்மை விட மெலியாரிடம் செல்லும் போது நாம் நம்மில் வலியார் முன் சென்றால் என்ன ஆவோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இரக்கம் என்பது நெஞ்சில் வேண்டும்.

செல்விஷங்கர்






Friday, February 27, 2009

24 : புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்ல(து)
ஊதியம் இல்லை உயிர்க்கு...................................... 01

இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்தலும் அதன் மூலம் புகழ் பெறும்படியாக வாழ்தலுமே வாழ்க்கைப் பயன். அதைத்தவிர வேறு எதுவும் துணையன்று. ==================================================
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்...................................... 02

இவ்வுலகில் புகழ்ந்து பேசப்படும் பெருமை எல்லாம், வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுபவனின் புகழேயாகும். ==================================================
ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்...................................... 03

நிலையற்ற இவ்வுலகில், அழியாது நிலைத்து நிற்பது புகழொன்றேயாகும். ==================================================
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு...................................... 04


இவ்வுலகில் நிலைத்த புகழ்ச்செயல் செய்தாரையே, மேலுலகம் போற்றும். தேவர்களை அன்று! தெய்வத்தின் மேலானது 'வறியவர்க்கு, ஒன்று ஈந்து' பெறும் புகழே.
==================================================
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது...................................... 05

வளர்ச்சியும் அழிவும் உலகத்து இயல்பு. அதில் புகழ்பட வாழும் வித்தை, ஈந்து வாழும் இன்பம் உடையவர்க்கே கைவரப் பெறும்.

==================================================
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...................................... 06

ஒரு செயலைச்செய்து புகழ்பெற முடியும் என்றால், அச்செயலால், நாம் இச்சமுதாயத்திற்கு அறிமுகமாக வேண்டும். இல்லையெனில் அச்செயலைச் செய்யாமல் இருப்பதே நன்று.
==================================================
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்...................................... 07

புகழ்பெறும் படும்படியான செயல்களைச் செய்து வாழ இயலாதவர்கள், தம் இயலாமைக்காகத் தன்னைத்தானே நொந்து கொள்ள வேண்டுமே தவிர, தன்னை இகழ்வாரை நோவதினால் ஒரு பயனும் இல்லை. ==================================================
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்...................................... 08

தனக்குப்பின், புகழ் எஞ்சி நிற்குமாறு வாழ அறியாதவர் வாழ்க்கை, பலரும் பழிக்கும் படியான வாழ்வாகிவிடும். ==================================================
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்...................................... 09

புகழ்பெறாத மக்களைச் சுமந்த நிலம், குற்றமற்ற நல்வளங்கள் எல்லாம் இழந்து நிற்கும் - மாசுற்ற மக்களால், மாசற்ற மண்ணும் கெடும்.

==================================================

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்...................................... 10

பழிநீங்குமாறு வாழ்பவர்களே, உண்மையில் உயிர் வாழ்பவர்கள். புகழ் நீங்குமாறு வாழ்பவர்கள் உயிருடன் நடமாடினாலும் உயிரற்றவர்களே!==================================================
செல்வி ஷங்கர்
==================================================

Sunday, January 4, 2009

23 : ஈகை

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து...................................... 01

இல்லாதார்க்கு ஒரு பொருளைக் கொடுத்து உதவுவதே ஈகை. அவ்வாறின்றிக் கொடுப்பதெல்லாம் ஒரு பயனை எதிர் பார்த்துச் செய்வதே ஆகும்.
==================================================
நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.......................................... 02

நல்வழி என்றாலும் பிறரிடமிருந்து ஒன்றைக் கொள்வது தீமையே ஆகும். மேலுலகம் இல்லை என்றாலும் பிறருக்கு ஒன்றைக் கொடுத்து உதவுவதே நன்மையாகும்.
==================================================

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள .................................... 03

இரப்பார்க்கு இல்லை என்று சொல்லாமல் ஒரு பொருளைக் கொடுத்தல் உயர்குடிப் பிறந்தாரின் பண்பாகும்.
==================================================

இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு............................................. 04

உதவி கேட்பவன் பெற்று மகிழும் இன்முகத்தைக் காணாது அவனுக்கு இல்லை என்று மொழிவது கையேந்திப் பிச்சை எடுப்பதை விடக் கொடியது.
==================================================
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்........................................... 05

தன்பசியை அடக்கிக் கொள்வது சிறந்த ஆற்றல் தான். ஆனாலும் பிறரின் பசித்துன்பத்தைப் போக்க உணவிட்டு உதவுபவனின் ஆற்றல் அதனை விட உயர்ந்தது.
==================================================
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி....................................... 06

இல்லாதவனின் பசித் துன்பத்தைப் போக்குவது தான் பொருள் பெற்ற ஒருவன் தன் பொருட்செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் முறையாகும்.
==================================================

பாத்தூண் மறீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது................................................. 07

இருப்பதைப் பகுத்துப் பிறருக்குக் கொடுத்து உண்பவனை பசியென்னும் கொடிய துன்பம் சேர்வதில்லை.
==================================================
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண வர்......................................... 08

பொருளைச் சேர்த்து வைத்துப் பிறருக்குக் கொடுத்து மகிழாதவர்கள் இருந்தும் இல்லாதவர்களே !
==================================================
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்..................................................... 09

இல்லாமையால் தவிப்பதை விடக் கொடுமையானது தானே தனித்திருந்து உண்பதாகும். கொடுப்பது மகிழ்ச்சி; மறைப்பது துன்பம்.
=======================================================
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.................................................. 10

இறப்பை விடக் கொடியது இவ்வுலகில் வேறொன்றுமில்லை. ஆனால் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுக்க முடியாத போது, ஈயாமல் இருப்பதை விட, இறப்பதே மேலாகும். மேலும் அக்கொடிய இறப்பும் கூட இனிதாவதுண்டு.
==================================================
செல்வி ஷங்கர்

==================================================