Saturday, July 19, 2008

17 : அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - 01

ஒருவன் தன் மனத்தின்கண் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். நினைவு சொல்லாகும். சொல் செயலாகும். செயல் நம் இயல்பை வெளிப்படுத்தும். எனவே அழுக்காறாமை உள்ளத்தின் கண் வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் - 02

எவரிடத்தும் பொறாமை இல்லாத பண்பினை ஒருவன் கொள்வானே யானால் அதை விட அவனுக்குப் பெருமை தரும் சிறப்புகள் வேறு எதுவும் இருக்க முடியாது.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான் - 03

இப்பிறப்பில் செல்வமும் மறு பிறப்பில் அறமும் வேண்டாமென்பவனே பிறரது செல்வ வளர்ச்சிக்கு உதவாது பொறாமைப் படுபவன்.

பொறாமைக்குணம் செல்வத்தையும் சிறப்பையும் கெடுக்கும். செல்வமும் சிறப்புமின்றி மனிதன் எப்படி வாழ்வது ? அதற்கு பொறாமையை விட்டு விட்டு வாழலாமே !

அழுக்காற்றின் அல்லவை செய்யர் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து - 04

தீநெறியால் ஏற்படும் குற்றத்தை உணர்ந்த அறிவுடையார் பொறாமை கொண்டு அறனழிக்க வல்ல தீயவற்றை ஒரு போதும் செய்யார்.

அழுக்காறு உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது - 05

அழுக்காறு உடையவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அப் பொறாமைப் பண்பு ஒன்றே அவருக்கு அழிவைத் தந்து விடும்.

கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் - 06

பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனின் சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும். இவன் பாவம், இவன் சுற்றத்தையே அழிக்கும் என்றால், இவனும் சிறப்பழிவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

அவ்வித்(து) அழ்க்கா(று) உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் - 07

பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமைப் படுபவனைக் கண்டு பொறுக்காத செல்வத் திருமகள் தான் சேராது தம் தமக்கைக்குக் காட்டி விடுவாள். துன்பத்திற்கு வழிகாட்டிச் செல்பவள் திருமகளின் தமக்கை.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் - 08

பொறாமை என்ற பாவி அதனை உடையானின் செல்வத்தை அழித்து அவனையும் தீய வழியில் செலுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - 09

பொறாமை உடையவனின் செல்வச் செழிப்பும் நற்பண்புடையவனின் வறுமை வாழ்வும் இவ்வுலகில் நினைத்துப் பார்க்கப் படும். காரணம் பிறவிப் பயனாக இருக்கலாம்.

அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - 10

பொறாமை உடையவன் புகழ் பெறுதலுமில்லை. அஃதில்லாதவன் அழிந்து விடுவதுமில்லை.

செல்வி ஷங்கர் - 19072008