Saturday, December 27, 2008

22 : ஒப்புரவறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லொ உலகு. 01

பயன்கருதாது பொழியும் மழை போன்றதுதான் அனைவரிடமும் அன்பைப் பொழிந்து செய்யும் உதவியும் ! மழைக்கு இவ்வுலகத்தார் எவ்வித உதவியும் செய்வதில்லை ! ஆனாலும் அது இவ்வுலகை காத்துக் கொண்டுதான் இருக்கிறது !
------------------------------------------------------------------------------------------
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 02

பாடுபட்டுத் தன்முயற்சியால் சேர்த்த செல்வங்கள் எல்லாம் தகுதி உடைய பிறர்க்கு உதவுதற்கே !
------------------------------------------------------------------------------------------
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 03

தேவருலகத்தும் பெறமுடியாதது ! வேறு எவ்வுலகத்தும் காணமுடியாதது !நாம் இவ்வுலகத்தே பிறருக்கு உதவி வாழும் அன்பின் சிறப்பு !
------------------------------------------------------------------------------------------
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 04

பிறர்க்கு உதவி செய்து வாழ்பவனே உண்மையில் உயிர் வாழ்பவன் ! அவ்வாறு இல்லாதவன் வாழ்க்கை உயிரற்ற வாழ்வே ஆகும் !
------------------------------------------------------------------------------------------
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 05

பிறர்க்கு உதவுபவனின் செல்வம் ஊரின் நடுவே உள்ள குளம் நீர் நிறைதலைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
பயன்மரம் உள்ளூர் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 06

உதவும் மனப்பான்மை உடையவனின் பெருஞ்செல்வம் பயன் தரும் மரம் ஊரின் நடுவே பழுத்ததைப் போன்றது !
------------------------------------------------------------------------------------------
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 07

ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழும் பெருந்தன்மை உடையவனின் செல்வம் மருந்து மரம் போன்றது. நோயகற்றும் மருந்து போல் பிறர் துன்பம் போக்கும் செல்வம் !
------------------------------------------------------------------------------------------
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். 08

வறுமை வந்துற்ற போதும் உதவி செய்யத் தயங்காதவர்கள் ஒப்புரவாளர்கள். உலகியல்பை அறிந்து உதவி வாழும் வாழ்வை மேற்கொண்டவன் வறுமையைக் கண்டு அஞ்ச மாட்டான்.
------------------------------------------------------------------------------------------
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா வாறு. 09

அடுத்தவர்க்கு உதவும் அன்பு மனங்கொண்டவன் தன் வறுமையை நினைத்துக் கலங்க மாட்டான். பொருளின்மையால் பிறர்க்கு உதவமுடிய வில்லையே என்ற நிலையை நினைத்துத் தான் மனம் வருந்துவான் !
------------------------------------------------------------------------------------------
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து . 10

ஒப்புரவு செய்வதால் கேடு வரும் என்றால் அக்கேட்டை ஒருவன் தன்னை விற்றாவது பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அது தன்னிலும் உயர்ந்ததாகும். உதவுதால் ஒரு போதும் கேடு வராது.
------------------------------------------------------------------------------------------

Saturday, November 1, 2008

21 : தீவினையச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. ( 201)
தீச்செயல்களைச் செய்ய தீயோர் அஞ்ச மாட்டர். ஆனால் மேலோரோ அஞ்சி நடுங்குவர்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். ( 202)
தீய செயல்களால் வரும் துன்பங்கள் மிகப் பெரிது. ஆதலால் அவை தீயைக் காட்டிலும் கொடியதாய் எண்ணப்படும். தீ தொட்டால் தான் சுடும். தீச் செயல்களோ நினைத்தாலே தீங்கு வரும்.

அறிவினுள் எல்லாம் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். (203)
பகைவர்க்கும் தீங்கு நினையாதிருத்தலே அறிவினுள் எல்லாம் தலை சிறந்த அறிவாகும்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு. (204)
மறந்தும் கூடப் பிறர்க்குத் தீங்கு நினையாதே ! நினைத்தால் உனக்கே அத்துன்பங்கள் வந்து சேரும்.

இலனன்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. (205)
ஏதும் அற்றவன் என்ற இல்லாமையால் கூட நீ தீச்செயல்களைச் செய்யாதே ! செய்தால் இன்னும் நீ வறுமைத் துன்பத்தால் வாட நேரிடும்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தவன். ( 206)
துன்பங்கள் தன்னைத் தொடரவேண்டாம் என்று எண்ணுபவன் பிறர்க்குத் துன்பம் தரும் தீச்செயல்களைச் செய்யாது இருத்தல் வேண்டும்.

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். ( 207)
எத்தகைய கொடிய பகை பெற்றாரும் அதிலிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால் பிறருக்குத் தீங்கு செய்தவர் அத்தீங்கிலிருந்து தப்பி வாழ்தல் அரிது.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று. (208)
நம் நிழல் நம்மை விட்டுப் பிரியாது நம் காலடியிலேயே உறைவது போல் தீங்கு செய்தார் கெடுதல் என்பது நிச்சயம்.

தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தோண்றும்
துன்னற்க தீவினைப் பால். (209)
தன் நல்வாழ்வினை விரும்பக் கூடிய ஒருவன் எவ்வகையிலும் பிறர்க்குத் தீவினை செய்ய நினைத்தல் கூடாது. தீமை என்றும் நன்மையைத் தராது.

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். (210)
தீவழிச் சென்று தீச்செயல் செய்யாதவன் என்றால் அவன் நல்லவன் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.

செல்வி ஷங்கர்

Tuesday, September 30, 2008

20 : பயனில சொல்லாமை

01 : பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்
பலரும் வெறுக்கும் படியான பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் எல்லாராலும் இகழப் படுவான்.

02 : பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது
பலர் முன்னிலையிலும் பயனற்ற சொற்களைச் சொல்லித் திரிபவன் அன்பற்ற சொற்களை நண்பர்களின் முன் சொல்லித் திரிதலை விடத் துன்பம் அடைவான்.

03 : நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை
ஒருவன் பயனற்றவன் என்பதை அவன் பேசும் வீணான சொற்களே காட்டி விடும். சொல் பயனுடையதாய் நயனுடையதாய் இருத்தல் வேண்டும்.

04 : நயண்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லார் அகத்து
பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பேசித் திரிபவனை அவன் சொற்களே அவனை நல்வழியில் இருந்து நீக்கிவிடும். நுணலும் தன் வாயால் கெடுவது இயற்கையே !

05 : சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நேர்மை உடையார் சொலின்.
நற்பண்புடையார் பயனற்ற வெற்றுச் சொற்களைக் கூறினால் அவர்தம் புகழும் பெருமையும் போய் விடும்.

06 : பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி எனல்
பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனை மனிதன் என்று சொல்வதை விட மக்களுள் பிறந்த பதர் என்று சொல்லுதல் வேண்டும்.

07 : நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
நல்ல சொற்களைச் சொல்லா விட்டாலும் பரவாயில்லை. சான்றோர் பயன் தராத இழிசொற்களைச் சொல்லாதிருத்தல் நன்று

08: அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இலாத சொல்
அறிதற்கரிய ஆற்றல் மிக்கார் ஒருநாளும் பெரும்பயன் தராத வீண்சொற்களைச் சொல்ல மாட்டர்.

09 : பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
அறிவு மயக்கம் நீங்கிய நல்லறிவு உடையார் மறந்தும் கூட பயனற்ற சொற்களைக் கூறார். மறதி மனிதனின் விரோதி - எவ்விடத்தாயினும் சரி !

10 : சொல்லுக சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயனிலாச் சொல்
சொல்லில் பயனுடைய சொற்களைச் சொல்ல வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்லாதிருத்தல் வேண்டும்.

செல்வி ஷங்கர் - 30092008




Monday, August 4, 2008

19 : புறங்கூறாமை

01 : அறம்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

ஒருவன் நற்செயலைச் செய்யாமல் தீய வழியில் நடப்பவனே ஆனாலும் பிறரைப் பற்றிப் புறங்கூறாமலிருத்தல் அவனுக்கு மேன்மையைத் தரும்.

02 : அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை

அறத்தை அழித்து அறமல்லாத பாவச் செயலைச் செய்வதை விடக் கொடுமையானது காணும் போது சிரித்துப் பேசி காணாத போது பழித்துப் பேசுதல்

03 : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்

புறங்கூறிப் பொய்யாக உயிர் வாழ்தலை விட இறத்தல் ஒருவனுக்கு அற நூல்கள் கூறும் நல்வழிப்பயனை எல்லாம் தரும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி வாழ்தல் வாழ்வே ஆகாது.

04 : கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்

நேருக்கு நேர் நின்று மனம் புண்படும்படி பேசினாலும் பேசலாம். ஆனால் அவன் இல்லாத இடத்து அவனைப் பற்றி மாறான சொற்களைப் பேசாதே !

05 : அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்

நல்வழிச் செல்லும் அன்பு உள்ளம் இல்லாதவன் என்பது அவன் கூறும் புறஞ்சொல்லின் புன்மையால் தெரிந்து விடும். ( புன்மை = இழிவு)

06 : பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்

பிறரைப் பழி கூறுபவன் தானும் அத்தகைய பழிச் சொல்லுக்கு ஆளாவான். இழித்தும் பழித்தும் பேசுபவன் பாராட்டப் படுதல் இல்லை.

07 : பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்

சிரித்துப் பேசி நட்புக் கொள்ளத் தெரியாதவர்கள் நட்புக் கூடப் பிரியும் படியான கொடுஞ்சொற்களைப் பேசிப் பிரித்து விடுவர்.

08 : துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னெகொல் ஏதிலார் மாட்டு ?

தம்மோடு நெருங்கிப் பழகுபவரையே தூற்றிப்பேசும் இயல்புடையார் முன்பின் அறியாதாரை என்ன பாடு படுத்துவர் ? இழித்தும் பழித்தும் பேசுதல் எவர்க்கும் ஏற்றதன்று. பேச்சில் கூட அன்பு பாராட்டத் தெரியாதவர்கள் செயலில் என்செய்வர் !

09 : அறன்நோக்கி ஆற்றுக்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை

கண்டொன்று சொல்லி காணாதொன்று பேசுபவனையும் அறம் கூறும் இவ்வுலகம் தாங்கிக் கொள்கிறது. பொறுத்தல் தன்னியல்பு என்பதால் இவ்விழிந்தவனையும் உலகு தாங்குகிறது

10 : ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு

பிறர் குற்றங்களைக் கண்டு உணர்வது போல் நம் குற்றங்களையும் நாம் கண்டால் இவ்வுலகில் நமக்குத் துன்பம் என்பதே இல்லை. தன்னைப்போல் பிறரையும் எண்ண வேண்டும். அடுத்தவனிடமும் அன்பு காட்ட வேண்டும்.

செல்வி ஷங்கர் - 04082008

Sunday, July 27, 2008

18 : வெஃகாமை

01 : நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

நடுநிலைமை இன்றி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள ஆசைப்பட்டால், நம் குடிச்சிறப்பும் அழிந்து நம்க்குக் குற்றங்கள் குறையாக வந்து சேரும். அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படுதல் அழிவையே தரும்.

02 : படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்

நடுவு நிலைமை தவறி நடக்க நாணுபவர்கள், பிறன் பொருளை ஆசையால் பறித்துக் கொள்ளும் பழிபடு செயலைச் செய்ய மாட்டர். செய்யத்தகாதன செய்ய நாண வேண்டும்.

03 : சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

நிலைத்த இன்பத்தை விரும்பும் நற்பண்பாளர், சிற்றின்பம் கருதி பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ள நினைக்கும் அறனில்லாச் செயலை ஒரு போதும் செய்ய மாட்டர்.

04 : இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் நல்லோர் வறுமையால் பிறர் பொருளைக் கவர நினைக்க மாட்டார்கள்.

05 : அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

அடுத்தவன் பொருளை அடைய விரும்பும் அறிவற்ற செயலைச் செய்யும் நுண்ணறிவாளரின் அறிவால் ஒரு பயனும் இல்லை ! அறிவின் பயனே நன்மை தீமை பகுத்துணர்வது !

06 : அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

நல்லறத்தை விரும்பி இல்லறம் நடத்துபவன் பொருளாசை கொண்டு பிறன் பொருளைக் கவர நினைத்தால் அவன் பெருமை கெட்டு விடும். பேராசைப் படுவதே பெருமையைக் குலைக்கும்.

07 : வேண்டற்க வெஃகியான் ஆக்கம் விளைவயின்
மாண்டற்கு அரிதாம் பயன்.

பிறன் பொருளைக் கவர்ந்து அதனால் வரும் வளர்ச்சியை நாம் ஒருபோதும் விரும்பக் கூடாது. விரும்பினால், கவர்ந்த செல்வம் ஒரு போதும் நற்பயன் தராது. நல்வழிக்கு நற்செல்வமே உதவும்.

08 : அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

நம் செல்வம் குறையாமல் இருக்க வேண்டுமெனில் நாம் பிறர் கைப்பொருளைக் கவர ஆசைப் படுதல் கூடாது.

09 : அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.

அறன் அறிந்து அடுத்தவன் செல்வத்திற்கு ஆசைப்படாதவனைத் தேடி, திருமகள் தானே தான் சேருமிடம் இதுவென அறிந்து சேர்வாள்.

10 : இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

அடுத்தவன் பொருளை அடைய ஆசைப்படுவது, அழிவைத் தரும் என்பதை உணர்ந்து, பிறன் பொருளை விரும்பா பெருமையே வாழ்வில் வெற்றியைத் தரும்.

செல்வி ஷங்கர் - 27082008













Saturday, July 19, 2008

17 : அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவந்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு - 01

ஒருவன் தன் மனத்தின்கண் பொறாமை இல்லாத இயல்பை ஒழுக்கமாகக் கொள்ள வேண்டும். நினைவு சொல்லாகும். சொல் செயலாகும். செயல் நம் இயல்பை வெளிப்படுத்தும். எனவே அழுக்காறாமை உள்ளத்தின் கண் வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின் - 02

எவரிடத்தும் பொறாமை இல்லாத பண்பினை ஒருவன் கொள்வானே யானால் அதை விட அவனுக்குப் பெருமை தரும் சிறப்புகள் வேறு எதுவும் இருக்க முடியாது.

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான் - 03

இப்பிறப்பில் செல்வமும் மறு பிறப்பில் அறமும் வேண்டாமென்பவனே பிறரது செல்வ வளர்ச்சிக்கு உதவாது பொறாமைப் படுபவன்.

பொறாமைக்குணம் செல்வத்தையும் சிறப்பையும் கெடுக்கும். செல்வமும் சிறப்புமின்றி மனிதன் எப்படி வாழ்வது ? அதற்கு பொறாமையை விட்டு விட்டு வாழலாமே !

அழுக்காற்றின் அல்லவை செய்யர் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து - 04

தீநெறியால் ஏற்படும் குற்றத்தை உணர்ந்த அறிவுடையார் பொறாமை கொண்டு அறனழிக்க வல்ல தீயவற்றை ஒரு போதும் செய்யார்.

அழுக்காறு உடையார்க்(கு) அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது - 05

அழுக்காறு உடையவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அப் பொறாமைப் பண்பு ஒன்றே அவருக்கு அழிவைத் தந்து விடும்.

கொடுப்ப(து) அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் - 06

பிறருக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுபவனின் சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவுமின்றிக் கெடும். இவன் பாவம், இவன் சுற்றத்தையே அழிக்கும் என்றால், இவனும் சிறப்பழிவான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ !

அவ்வித்(து) அழ்க்கா(று) உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும் - 07

பிறர் ஆக்கம் கண்ட இடத்துப் பொறாமைப் படுபவனைக் கண்டு பொறுக்காத செல்வத் திருமகள் தான் சேராது தம் தமக்கைக்குக் காட்டி விடுவாள். துன்பத்திற்கு வழிகாட்டிச் செல்பவள் திருமகளின் தமக்கை.

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும் - 08

பொறாமை என்ற பாவி அதனை உடையானின் செல்வத்தை அழித்து அவனையும் தீய வழியில் செலுத்தி விடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும் - 09

பொறாமை உடையவனின் செல்வச் செழிப்பும் நற்பண்புடையவனின் வறுமை வாழ்வும் இவ்வுலகில் நினைத்துப் பார்க்கப் படும். காரணம் பிறவிப் பயனாக இருக்கலாம்.

அழுக்கற்(று) அகன்றாரும் இல்லை அஃதில்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - 10

பொறாமை உடையவன் புகழ் பெறுதலுமில்லை. அஃதில்லாதவன் அழிந்து விடுவதுமில்லை.

செல்வி ஷங்கர் - 19072008

Wednesday, July 16, 2008

16 : பொறையுடைமை

01 : அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை

தன்னைத் தோண்டுபவனையும் விழாமல் தாங்கி நிற்கும் நிலம் போல் நாம் நம்மை இகழ்ந்து பேசுபவர்களையும் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

02 : பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனின் நன்று

நாம் பிறர் செய்த தீங்கினைப் பொறுத்துக் கொள்ளுதல் வேண்டும். முடிந்தால் அதனை மறந்து விடுதல் அதனினும் நன்று.

03 : இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை

வறுமையில் மிகப் பெரிய வறுமை நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை நாம் வரவேற்காமல் இருப்பதே. அதைப் போல் வலிமையில் மிகப் பெரிய வலிமை, அறியாமல் நம்மை இகழ்ந்து பேசுபவரை நாம் பொறுத்துக் கொள்வதே !

04 : நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்

நற் பண்புகள் நம்மை விட்டு நீங்காமல் இருக்க வேண்டுமானால் நாம் பொறுமையை மேற்கொள்ள வேண்டும். பிறர் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வதே உயர் பண்பு.

05 : ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து

ஒருவர் செய்த தீங்கைப் பொறுக்காது தண்டித்தவரை இந்த உலகம் ஒரு பொருட்டாகக் கருதாது. ஆனால் அச்செயலைப் பொறுத்துக் கொண்டவரை பொன்னைப் போற்றிப் புகழ்வது போல் போற்றி மகிழும்.

06 : ஒறுத்தார்க்(கு) ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

தமக்குத் தீங்கு செய்தவனைத் தண்டித்தவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பம். ஆனால் அதனைப் பொறுத்துக் கொண்டவர்க்கு இந்த உலகம் உள்ளவரை புகழ்.

07 : திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று

தகாத செயலை நமக்குப் பிறர் செய்யினும் அதற்காக நாம் மனம் வருந்தி அவர்க்கு நன்மை தராத செயலைச் செய்யாதிருத்தல் நன்று. தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.

08 : மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்

மிகுந்த சீற்றம் கொண்டு கொடிய தீச்செயலை நமக்குச் செய்தவரை நாம் நம்முடைய பொறுமை என்னும் தகுதியால் வென்று விடல் வேண்டும்.

09 : துறந்தாரின் தூய்மை உடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்

பிறர் கூறும் கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்பவர்கள் ஆசைகளைத் துறந்த துறவியரைக் காட்டிலும் மேலானவர்கள் ஆவர்.

10 : உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்

உண்ணா நோன்பினை மேற்கொள்ளும் பெரியவர்களும் பிறர் சொல்லும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்களின் பின் வைத்தே எண்ணப் படுவர். பொறுமை என்பது துறவினும் மேலானது.

செல்வி ஷங்கர் - 16072008

Sunday, July 13, 2008

இரண்டில் ஒன்று

சிறகுகள் இரண்டு பறப்பதற்கு
சக்கரங்கள் இரண்டு ஊர்வதற்கு
கண்கள் இரண்டு பார்ப்பதற்கு
காதுகள் இரண்டு கேட்பதற்கு
கைகள் இரண்டு செய்வதற்கு
கால்கள் இரண்டு நடப்பதற்கு
ஆனால் உள்ளம் ஒன்று தான்
உணர்வதற்கும் உணர்த்துதற்கும்

15 : பிறன் இல் விழையாமை

01 : பிறன்பொருளால் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்க்கண் இல்

மாற்றான் மனைவியைத் தனதாக்கிக் கொள்ள விரும்பும் அறியாமை இவ்வுலகில் அறம் பொருள் கண்ட ஆன்றோரிடத்து இல்லை.

02 : அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்

நல்லவற்றை எல்லாம் மறந்து, தீயவற்றைச் செய்யும் தீயவரினும் தீயவர் மாற்றான் மனைவியை விரும்பி அவர் வீட்டின் முன் நிற்கும் பேதையரே !

03 : விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்

நன்கு அறிந்தாரின் மனைவியை விரும்பி தீமை புரிபவர்கள் உயிரோடு இருந்தாலும் இறந்தாரே ! மானம் உயிர். மானமிழந்து வாழ்தல் உயிர் துறந்து வாழும் உணர்வற்ற வாழ்வே !

04 : எனைத்துணையர் ஆயினும் எண்ணாம் தினைத்துணையும்
தேரான் பிறன்இல் புகல் ?

சிறிதும் நினைத்துப் பார்க்காமல் மாற்றான் மனைவியை விரும்புபவன் எவ்வளவு புகழும் பெருமையும் உடையவனாய் இருந்தாலும் அவற்றால் ஒரு பயனுமில்லை. புகழும் பெருமையும் ஒழுக்கத்தால் வருவது. ஒழுக்கம் தவறுதல் உயிரை விடுதலுக்குச் சமமாகும்.

05 : எளிதென இல்இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

எளிதென எண்ணி பிறன் மனைவியை அடைய நினைப்பவன் காலத்தால் அழியாத பெரும் பழியை அடைவான்.

06 : பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்இறப்பான் கண்

நெறி கடந்து மாற்றான் மனைவியை அடைய நினைப்பவன் இடத்தே பகை, பாவம், அச்சம், பழி என்ற நான்கும் நீங்காது நிற்கும்.

07 : அறன்இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன்இயலான்
பெண்மை நயவா தவன்

அற வழியில் சென்று இல்லறம் நடத்துபவன் என்பவன் பிறருக்கு உரிமை உடைய பெண்மையை ஒரு நாளும் விரும்பான்

08 : பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு

மாற்றான் மனைவியை மனத்தாலும் நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் மட்டும் அன்று. நிறைந்த ஒழுக்கமும் ஆகும். ஒழுக்கமே அறம்.

09 : நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார்

கடல் சூழ்ந்த இவ்வுலகத்தே அனைத்து நலன்களும் கை வரப் பெற்றவர்கள் யாரென்றால் பிறன் ஒருவனுக்கு உரிமை உடையவளின் தோள் சேராதவரே ! நலன் ஒழுக்கத்தால் பெறப்படுவது.

10 : அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையான்
பெண்மை நயவாமை நன்று

அறங்களைச் செய்யாது பாவங்களைச் செய்பவனாக இருந்தாலும், அவன் பிறன் மனைவியை விரும்பாதிருத்தலே அவனுக்கு நன்மை தரும்.

செல்வி ஷங்கர் - 13072008


Sunday, July 6, 2008

14 : ஒழுக்கமுடைமை

01 : ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

ஒழுக்கம் ஒருவனுக்கு உயர் சிறப்பைத் தருவதால் அது உயிரைக் காட்டிலும் மேலானதாகும். உயிர் சிறந்ததாயினும் ஒழுக்கம் அதை விட உயர்ந்தது. உயிரை விட்டு விட எண்ணலாம்.ஆனால் ஒழுக்கத்தைத் தவறியும் விடுதல் கூடாது. வாழும் மனிதனுக்கு உயிர் ஒழுக்கம்.

02 : பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாக எண்ணிக் காக்க வேண்டும். எவ்வகையில் ஆராய்ந்து பார்த்தாலும் ஒழுக்கத்தை விட உயிருக்குத் துணையானதும் மேலானதும் வேறொன்றுமில்லை.

03 : ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

ஒழுக்கமே ஒருவருக்குக் குடிச்சிறப்பாகும். அவ்வொழுக்கம் தவறுதல் மிகவும் இழிந்த பிறப்பாய் விடும். உயர் குடியில் பிறந்தாலும் ஒழுக்கம் தவறினால் அது இழிவாய் நிற்கும்.

04 : மறப்பினும் ஒத்துக்கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

வேதத்தைக் கற்றவன் அதை மறந்தாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் ஒருவன் பிறப்பொழுக்கம் தவறினால் அவன் சிறப்பே கெட்டு விடும். கற்றது மறக்காது; தவறினால் ஒழுக்கம் மீண்டும் பெற முடியாது.

05 : அழுக்கா(று) உடையான்கண் ஆக்கம்போன்(று) இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு

பொறாமை உடையவன் இடத்தே வளரும் செல்வம் இல்லை. அது போல் ஒழுக்கம் இல்லாதவனிடத்தில் உயர்வில்லை.

06 : ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்(கு) அறிந்து.

நெஞ்சுரம் மிக்கொர் ஒரு போதும் ஒழுக்கம் தவறார். காரணம் ஒழுக்கம் தவறுதலினால் வரும் குற்றத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் மேலோங்கி நிற்பதனால். ஒழுக்கமே அவர்க்கு மனவலிமை.

07 : ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

ஒழுக்கத்தால் மேலான புகழைப் பெறுவர். ஒழுக்கம் தவறுதலால் தீராத பழியை அடைவர். பழி, பாவத்தை விடக் கொடியது. செய்யக்கூடாத செயலைச் செய்வதால் பெறுவது பாவம்; செய்யாத செயலுக்கு ஆளாவது பழி.

08 : நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நன்மைக்கு வழி காட்டுவது நல்லொழுக்கம். தீராத துன்பத்தைத் தருவது தீயொழுக்கம்.

09 : ஒழுக்கம் உடையார்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

ஒழுக்கமுடையவர்கள் மறந்தும் கூட நாத்தவறி தீய சொற்களைக் கூற மாட்டர்; எண்ணவும் மாட்டர்; செய்யவும் மாட்டர்.

10 : உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்

உலக நடைமுறை ஒழுக்கத்தைக் கல்லாதவர்கள் எவ்வளவுதான் கற்றிருந்தாலும் அறிவற்றவராகவே கருதப்படுவர். நன்மையைச் செய்வதும்;தீமையை மறப்பதும், உண்மையைச் சொல்வதும்; பொய்ம்மையைத் தவிர்ப்பதும், ஆக்கத்தை நினைப்பதும்; அழிவை மறப்பதும் உலக நடையாகும்.

செல்வி ஷங்கர் : 06.07.2008




Thursday, June 26, 2008

13 : அடக்கமுடைமை :

01 : அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கம் ஒருவன் நல்வாழ்விற்கு வழிகாட்டி அவனை தேவரிடத்து அழைத்துச் செல்லும். அடங்காமை தீவழிச் செலுத்தி அவ்னை நரகத்தில் தள்ளிவிடும்.

02 : காக்கப் பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூங் கில்லை உயிர்க்கு

அடக்கமே இவ்வுயிர்க்குச் சிறந்த செல்வம். அதை விடப்பெரிய செல்வம் வேறில்லை. அதனால் நாம் காக்க வேண்டிய பொருள்களுள் அடக்கத்தை ஒன்றாகக் கொண்டு காக்க வேண்டும். உயிரையும் உடலையும் விட்டு விடுவோமா எளிதில் ? அது போல் அடக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

03 : செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

அறியவேண்டியவற்றை அறிந்து அடங்கி நடந்தால் அவ்வடக்கமே அவனுக்குப் புகழைத் தரும்.

04 : நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

இல்வாழ்க்கை நெறியில் சென்று அடக்கத்தை மேற்கொள்பவன் பெருமை மலையைக் காட்டிலும் பெரியது. மனிதன் மலை போல் தோற்றம் பெறுதல் மலைப்பான் செயலல்லவா !

05 : எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

பணிவுடைமை என்பது எல்லார்க்கும் நன்மையைத் தரும். அதிலும் செல்வர்கள் பணிந்து நடந்தால் அது அவர்கள் மேலும் ஒரு செல்வத்தைப் பெற்ற சிறப்பைத் தரும். அடக்கமே பெருஞ்செல்வம்.

06 : ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து

ஆமை தன்னைத் துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள தன் ஓட்டினுள் ஐந்து உறுப்புகளையும் அடக்கிக் கொள்வது போல் ஒருவன் ஒரு பிறப்பில் தன் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால் அவ்வடக்கம் அவனுக்கு ஏழு பிறப்பிலும் துணை நிற்கும். ஒன்று எழானால் உயர்வல்லவா ! உவப்பல்லவா !

07 : யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

எவற்றைக் காக்காவிட்டாலும் சரி ஒருவன் தன்னுடைய நாவை மட்டுமாவது அடக்கி ஆள வேண்டும். இல்லையெனில் அவன் சொல் குற்றத்தால் துன்பப்படுவான். கல்லால் அடித்த அடியை விட வலியுடையது சொல்லால் அடித்த அடி !

08 : ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்

நாவடக்கமின்றி தீச்சொற்களைப் பேசித் திரிபவனிடம் எந்த நன்மையும் பயன் தராது. ஒரு தீமை பல நன்மைகளை பயனற்று விடச் செய்யும். ஒன்று பலவற்றை அழிக்குமென்றால் அந்த ஒன்றை நாம் அடக்க வேண்டாமா ?

09 : தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு

ஒருவனைத் தீயினால் சுட்ட புண் மருந்திட்டால் ஆறிவிடும். ஆனால் தீய சொற்களால் மனம் புண்படும் படி பேசிய சொற்கள் ஏற்படுத்தும் மனக்காயம் மருந்திட்டாலும் ஆறாது. வடுவை ஏறபடுத்தி விடும். புண்ணே கொடிது ! வடு அதனினும் கொடியது !

10 : கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

மனத்தே பொங்கி எழும் சினத்தை அடக்கி, கற்று அடங்கியவன் இருக்குமிடத்தைத் தேடி, அறக்கடவுள் தானே செல்வான். கற்றலின் பயன் அடங்கலே ! அதை அறிந்தவன் சினத்தை அடக்கி சொற்களை ஆளுதல் எளிது. அப்படிப்பட்ட சொற்களைக் கேட்க அறமே வழி கேட்டுச் செல்லும். அறம் நம் முன்னே வருமென்றால் நாம் அதை வரவேற்க வேண்டாமா ! அடக்கத்துடன்!

செல்விஷங்கர் - 26082008

Tuesday, June 17, 2008

சிவாசி மற்றும் சிலேபி பற்றி ......

சதங்கா அழைத்து விட்டார் - எதற்கு ?

சிவாசி வாயிலே சிலேபியாம் - இது தொடராம் - மூவர் மூவராக அழைக்க வேண்டுமாம். விதி முறைகள் கடுமையாக இருக்கின்றன.

அக்காலகட்டத்தில் ஒரு அஞ்சலட்டை வரும்( இக்காலத்திலும் தான்) - அதை 10 பேருக்கு அனுப்பினால் கோடீஸ்வரனாகலாம் - இல்லையெனில் தலை சுக்கு நூறாய்ச் சிதறும் என்று. நாங்களும் அனுப்பி அனுப்பி கோடீஸ்வரர்கள் ஆனோம்.

நிற்க ( எல்லோரும் எழுந்து நிக்காதீங்க)

எப்படித்தான் எல்லாரும் சிலேபி சுத்தறாங்களோ தெரியல - நானும் சிக்கலில்லாம ஒரு சிலேபியாச்சும் சுத்திடலாமுன்னு பாக்கறேன். அது எப்படி அடுக்கடுக்கா ! அழகழகா ! நூல் கட்டி கண்ணாடித் தடுப்புக்குள்ள - அப்படியே சாப்பிடலாம் போல இருக்கு !

என்ன சொன்னாலும் இந்த "ஜி" யைப் பாருங்க - எத்தன வளைவு - எத்தன நெளிவு - அந்தக் கொம்புலே - அத விடுங்க.

அந்த "லே" - அதுக்கு ஒரு தனிக்கதையே இருக்குங்க - ஆமா - ஒரு குட்டிப்பையன் வந்தான் - தமிழ் படிக்க ! மிஸ் மிஸ் நான் நவீன் - எனக்கு தமிழ் டிக்டேசனே வர மாட்டெங்குதுன்னான். "லே" போடுன்னா அவன் கேட்டான் - மிஸ் லாங்கா ஷர்ர்ட்டா ? இல்லல்ல - ஜஸ்ட் லைக் ஃபோன். எப்படி இருக்கு "லே" போட்ட கதெ. ( குறிப்பு : அவன் கேட்டது குறிலா நெடிலான்னு - ஃபோன் அப்படின்னா லாங்குன்னு பதில்)

ஒரு வேளை சிவாசி சிலேபி சாப்பிட்டாரா சாப்பிடலயான்னு யாருக்குத் தெரியும் ? எல்லாரும் சேர்ந்து அவர் வாயிலே சிலெபியைத் திணிச்சிட்டாங்க. எப்படியோ அவரும் சிலேபிய சகிச்சிக்கிட்டாரு. ஏன்னா பஜ்ஜி சொஜ்ஜி போல இல்லாம ஜூஸியா இருக்கறதாலெ ! அப்படியே வாயிலே போட்டாரு - நழுவிடுச்சி !

வீர சிவாசி பத்தி உங்களுக்கெல்லாம் தெரியுமா ? எனக்குத் தெரியுமே !!

ஏன்னா எங்க வீட்டுக் கண்ணுக் குட்டி நர்சரிலே படிச்சப்போ, "இ" போடுடா கண்ணான்னா, வேக வேகமா வந்து நாலு கோடு போடும் - "E" . இது இல்லடா கண்ணா - அ ஆ இ போடுடான்னா, சரிசரின்னு தல ஆட்டிட்டு சுத்தோ சுத்துன்னு வட்டவட்டமா சுத்தும். நிறுத்தவே நிறுத்தாது. ஏய்! ஜிலேபியா சுத்தறே நீன்னு தொடையிலே ஒரு படார். அதுக்கப்புறம் "இ"க்கண்ணா எழுதறப்ப அப்பா பக்கமே போகாது. எப்படி எங்க வீட்டு "இ".


இந்தக் கண்ணுக்குட்டி, "இ" போட்டது தான் எனக்கு இங்கே சிலேபி சுத்த உதவிச்சு. ஆமா ! அந்தக் கண்ணுக்குட்டி அதுக்கப்புறம் பாருங்க ! குட்டியா இருந்துக்கிட்டே ஒரு அஞ்சு நிமிடம் அழகான தமிழ்லே வீர சிவாசி வசனம் பேசுச்சு பாருங்க ! ஆடீட்டோரியமே அசந்து போச்சு ! எப்படி சிவாசி !

சிலேபி சாப்பிட்டா மட்டும் போதாதுங்க ! சிவாசி மாதிரி வீரமா இருக்கணும். ஜெய் பவாணி !!!
ஆமா - நானு மூணு பேர அழைக்கணுமாமில - அழைச்சிடுவோம்
1. பாசமலர்
2. புது வண்டு
3. நிலா

17.06.2008 - செல்விஷங்கர்

Sunday, June 15, 2008

கருத்துகள் மகிழும் கோப்புகள்

சின்னஞ்சிறு மலர்கள்
சிரிக்கின்றன! சிரிக்கும்
நேரம் சிந்தனைப்
பூக்கள் தெரிக்கின்றன!

தட்டித் தட்டிக்
கொடுத்து! எட்டி
எட்டிப் பார்த்த
எண்ணங்கள் நெஞ்சில்!

கட்டிக் கொடுத்த
சோறும்! கற்றுக்
கொடுத்த சொல்லும்
காலத்தில் சிறக்க!

குட்டிக் குருவிகள்
குலவும் குடும்பம்!
குழந்தைகள் கொஞ்சும்
கோகுலம்! ஆம்!

சிந்தை மணக்க
சிரித்து மகிழும்
சிறிசுகள் இங்கே!
உள்ளம் ஏங்கும்
உறவுகள் சிலிர்க்கும்!

காலம் கடந்த
பின்னும் கண்ணுள்
தோன்றும் காட்சிகள்
இங்கே! கருத்துகள்
மகிழும் கோப்புகள்!

செல்வி ஷங்கர்

Monday, June 9, 2008

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

அசைந்த மரங்கள்
ஆடினால் ? வீசிய
காற்று சுழற்றினால் ?
பெய்தமழை பேய்மழை
ஆனால் ? வீதி
வெள்ளம் வீட்டினுள் !!!

இடித்த வானம்
கொட்டித் தீர்த்தது !
மின்னிய மேகம்
முழங்கி முடித்தது !
நின்ற மரங்கள்
சாய்ந்து வீழ்ந்தன !
சாரியாய் நின்ற
கார்கள் சரிந்தன !

மின்விளக்கு
மின்னிமறைந்தது !
கதவுகள் படபடக்க
பெயர்ப் பலகைகள்
பெயர்ந்தன !

அடித்து ஊற்றிய
மழையில் ! வீசித்
தீர்த்த காற்றில்
வீடுகள் பறந்தன !
விடுத்த கரங்கள்
நசுங்கி வீங்கின !
விரலின் நுனிகள்
விண்டு வீழ்ந்தன !
என்னே காற்று !!
என்னே மழை !!
எங்கும் வெள்ளப்
பெருக்கு ! இருட்டு
வீதிகள் ! விழிகள்
தேடிய வெளிச்சம் !
ஓடி ஓய்ந்த
கால்கள் ! தேடும்
பாதை தெருவில் !
கையைப் பிடித்து
கண்ணொளி இன்றி
கரும் படலில்
கால்களின் நடை !

ஓய்ந்ததா ? உலர்ந்ததா ?

செல்வி ஷங்கர் - 09062008
-------------------------------------

Wednesday, May 28, 2008

12 : நடுவுநிலைமை

01 : அன்புடைய நண்பர், அன்பற்ற பகைவர், அறியாத அயலார் என்ற மூவரிடத்தும் நீதி தவறாது நிற்றலே நடுவுநிலைமை. அஃதே சிறந்த அறம்.

02 : நடுவுநிலைமை உடையவனின் செல்வம் அவன் வழித் தோன்றல்களுக்கு நன்மை தரும். அவனுக்கும் சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.

03 : நன்மையே தருவதாய் இருந்தாலும், ஒருவன் நடுவுநிலைமை தவறுதலால் வரும் செல்வத்தை ஏற்றல் கூடாது. அதை அக்கணமே விட்டொழிக்க வேண்டும்.

04 : ஒருவன் நடுவுநிலைமை உடையவனா ? அற்றவனா ? என்பது அவனுக்குப் பின் எஞ்சி நிற்கும் மக்களாலும் அவன் பெற்ற புகழ், பெருமை முதலியவற்றாலும் அறியப் படும்.

05 : ஆக்கமும் அழிவும் இந்த உலகில் புதுமையாய்த் தோன்றினவை அல்ல. நாம் தோன்றும் முன்பே அவையும் தோன்றி இருந்தன. இதனை நினைத்து நடுவுநிலைமை தவறாது இருத்தல் வேண்டும். அதுவே சான்றோர்க்கு அழகு. அதனால் அது மற்றவர்க்கும் அழகாகும்.

06 : மனம் நடுவுநிலைமை தவறிய செயல்களைச் செய்வோம் என்று எண்ணும் போதே நாம் நிச்சயம் அழிவோம் என்பதை உணர வேண்டும். நினைத்தலும் செய்தலுக்கு சமமே !

07 : நடுவுநிலைமை தவறாத ஒருவனின் வறுமை நிலையை இவ்வுலகம் இழிவாகக் கருதாது. நடுவு நிலைமையில் நின்று செயல்களைச் செய்பவனுக்கு வறுமை ஏற்படாது. ஒரு வேளை வறுமை ஏற்பட்டாலும் அது வளர்ச்சியே ஆகும்.

08 : தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு பின் தன்னிடம் இடப்பட்ட பொருள்களை சமமாகப் பங்கிட்டுத் தரும் தராசு போன்றவர்கள் சான்றோர்கள். வேண்டியவர், வேண்டாதவர், அறியாதவர் என்ற மூவரிடத்தும் சமமாக நடத்தலே சான்றோர்க்கணி.

09 : மனத்தின் கண் நடுவுநிலைமை உடையவனின் வாய்ச் சொற்கள் ஒரு போதும் குற்றம் செய்வதில்லை. சொல்லின் கண் தவறாமையே நடுவுநிலைமை. சொல்லே செயலுக்கு அடிப்படை. செயல் எண்ணத்திற்கு அடிப்படை.

10 : வாணிபத்திற்கு நடுவுநிலைமை மிக மிக இன்றியமையாதது. பிறர் பொருளையும் தன் பொருளாக நினைத்து வாணிபம் செய்திட வேண்டும். கொடுப்பதும் குறையக் கூடாது. கொள்வதும் மிகை படக் கூடாது.

செல்வி ஷங்கர்

----------------------


Monday, May 26, 2008

11: செய்ந்நன்றி அறிதல்

01 : நாம் எந்த உதவியும் செய்யாதிருக்க, நமக்கு ஒருவர் உதவி செய்வாரேயானால், அந்த உதவிக்கு இந்த மண்ணுலகையும், அந்த விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அது ஈடாகாது. செய்யாமல் செய்த உதவியின் பலன் தேடினாலும் கிடைக்காத செல்வமாகும்.

02 : தக்க காலத்தில் செய்த உதவி சிறியதாயினும் அதன் தன்மை இந்த உலகை விடப் பெரியது. காலம் தவறிச் செய்யும் உதவி கடுகளவும் பயனற்றது.

03 : எந்தப் பயனையும் எதிர்பாராமல் செய்த உதவியின் தன்மையை ஆராய்ந்தால் அது கடலை விடப் பெரியதாகும். பயன் கருதாத உதவிப் பண்பு பாரில் உயர்ந்தது.

04 : செய்ந்நன்றி அறியும் பண்புடையார் ஒருவன் தினையளவு உதவி செய்திருந்தாலும் அதனைப் பனையளவாகக் கொள்வர். உதவும் செயலில் சிறுமை பெருமை இல்லை. உதவி உலகின் கடைக்கோடியில் உள்ளவரையும் சென்றடைய வேண்டும்.

05 : உதவியின் பயன் செய்யப்பட்ட செயலின் அளவைப் பொறுத்ததன்று. செய்யப்பட்டவர்களின் சால்பினைப் பொறுத்தது.

06 : நல்லவர்களின் நட்பை மறத்தல் கூடாது. துன்பத்தில் நமக்குத் துணையாய் இருந்தவர்களின் உறவை இழத்தல் கூடாது. நல்ல நட்பையும் நட்பின் துணையையும் பிரிதல் நமக்கே இழப்பு !

07 : நல்லவர்கள் தங்கள் துன்பம் துடைத்தவர்களின் நட்பை ஒரு பிறப்பிலல்ல - ஏழு பிறப்பிலும் நினைப்பர். நட்பை மறப்பது நன்றி மறந்த செயல்.

08 : ஒருவன் செய்த நன்மையை மறப்பது நன்றன்று. ஆனால் அவன் செய்த தீமையை அன்றே மறந்து விடல் மிகவும் நன்று.

09 : நமக்கு உதவி செய்த ஒருவன் பின் ஒருகால் நம் உயிரைப் போக்குவது போன்ற தீமையைச் செய்தாலும் நாம் அவன் முன்பு செய்த நன்மையை நினைத்துப் பார்த்தால் அந்த தீமையும் மறைந்து விடும்.

10 : எத்தகைய நல்லறச் செயல்களை அழித்தவனுக்கும் இவ்வுலகில் வாழ வழியுண்டு. ஆனால் ஒருவன் செய்த உதவியை மறந்தவனுக்கு இவ்வுலகில் வாழ வழியே இல்லை. அவன் பாவங்களில் இருந்து தப்பிப் பிழைக்க முடியாது. செய்ந்நன்றி மறந்தவன் மனிதனே அல்லன்.

செல்வி ஷங்கர்
--------------------

Sunday, May 25, 2008

புறத்தூய்மை - அகத்தூய்மை - ஒரு சிந்தனை

நாள்தோறும் நாடேடுகளைப் பார்க்கும் போது நம்மனம் நம்மை அறியாமலே ஒன்றைச் சிந்திக்கின்றது. அச்சிந்தனையின் விளைவே இச்சித்திரம் :
------------------------------------------------------------------------------------
உண்பதும் உறங்குவதும் உடுப்பதும் தான் வாழ்க்கை என்றால் ஒரு நொடி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். மனித இனம் ஒன்று தான் படைப்பிலிருந்து வளர்ந்திருக்கிறதாம். பிற உயிரினங்கள் எல்லாம் படைப்புக் காலத்தில் எவ்வாறு இருந்தனவோ அவ்வாறே தான் இன்று வரை இருக்கின்றனவாம் ! அப்படி என்றால் படைப்பிலேயே உயர்ந்த மக்களினம் தம் வளர்ச்சியால் பெற்ற பயனை உலகின் நன்மைக்கு வழி காட்ட வேண்டாமா ? எவ்வளவு தூரம் நாம் முயன்று முன்னேறி இருக்கின்றோமோ அந்த அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் நாம் வழி பிறழ்ந்து இருக்கிறோம். பாமரன் பத்துத் தவறு செய்தால் படித்தவன் பத்தாயிரம் தவறு செய்கின்றான் என்ற சிந்தனை காலமறிந்த உணமையாகி விட்டதே ! அத்தவற்றால் இயற்கையும் சமுதாய வளர்ச்சியும் அல்லவா கெடுகிறது ? எதிர் காலத்தைச் செவ்வையாகச் செய்ய வேண்டியவர்கள் நடைமுறையை அல்லவா பாழ்படுத்திக் கொண்டிருக்கின்றனர். எப்படிச் சமுதாயம் உருப்படும் ? ஒவ்வொருவரும் தன்னைச் சுற்றி தன்னிலிருந்து நல்வழியை உருவாக்குவோம். முதலில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம் ! இல்லை எனில் காற்ருக்கும் நீருக்கும் நாம் கனலாய்ப் பறக்கும் காலம் வெகு தூரத்திலில்லை. புறத்தூய்மை அகத்தூய்மைக்கு வழி காட்டும் !!!

செல்வி ஷங்கர்
--------------------

வா இங்கே !!!

காலைக் கதிரவனே !
கடலில் உதிக்கின்றாய்
மலையில் மறைகின்றாய்
மண்ணில் சிரிக்கின்றாய் !

மலர்கள் மலர்கின்றன
தளிர்கள் துளிர்க்கின்றன
மரங்கள் செழிக்கின்றன
உன்வரவால் உலகேஒளிரும் !

இளங்காலைப் பொழுதில்
இன்பம் தருகின்றாய்
இருளை மறைக்கின்றாய்
இளங்கதிரே ! வா இங்கே !
வையத்தில் வளங்காண !

10 : இனியவை கூறல்

01 : இன்சொல் என்பது அன்புடையதாய் குற்றம் நீங்கியதாய் உள்ள அருள் மனம் படைத்தாரின் வாய்ச் சொற்களே ஆகும். அன்புடைய மொழி அருள் மொழி ஆகும்.

02 : உள்ளம் உவந்து ஒரு பொருளைக் கொடுப்பதைக் கட்டிலும் சிறந்தது முகமலர்ந்து இன்சொல் பேசுதல். அதுவே இன்பம் பயக்கும்.

03 : முகமலர்ந்து நோக்கி மனமகிழ்ந்து இன்சொல் பேசுதலே அறம். சொல்லுக்கு மலர்ச்சி முகத்தில் வேண்டும்.

04 : எல்லாரிடத்தும் இன்சொல் பேசுபவர்க்கு துன்பத்தைத் தரும் வறுமை இல்லாது போகும். வறுமை கூட இனிக்கும் இன்சொல்லில்.

05 : பணிவுடையவனாயும் இன்சொல் பேசுபவனாகவும் இருப்பதே ஒருவனுக்கு அழகு. பிற அணிகலன்கள் எல்லாம் பண்பிற்கும் இன்சொல்லிற்கும் பின்னெ தான். புன்னகை பூக்கும் புதுமையான அணிகலன் இன்சொல்.

06 : நல்லவற்றை விரும்பி இன்சொற்களைக் கூறுபவனுக்கு தீமைகள் மறைந்து நன்மைகள் பெருகும். தீமை போக்கும் புது வழி இன்சொல் பேசும் நல்வழியே !

07 :பிறர்க்கு நன்மைப் பயனைத்தந்து நற்பண்பிலிருந்து தவறாத இன்சொற்கள் நமக்கு நல்வாழ்வையும் நல்வழியையும் காட்டும்.

08 : துன்பம் நீங்கிய இன்சொல் ஒருவனுக்கு இப்பிறப்பில் மட்டுமல்ல மறு பிறப்பிலும் இன்பத்தைத் தரும். வேதனையால் வேர்த்துவிடும் இதயம் இன்சொல்லால் குளிர்ந்து விடும். அப்போது இப்பிறப்பென்ன எப்பிறப்பும் இன்பமே !

09 : பிறர் பேசும் இன்சொற்கள் தமக்கு இன்பம் தருவதை உணர்கின்ற ஒருவன் எதற்காகத் துன்பத்தைத் தருகின்ற வன்சொற்களைப் பேச வேண்டும். புரியாத புதிர் தானே இது. இன்சொல் பேசுவதால் நா வடுப்படுவதில்லையே !

10 : இயற்கையில் இன்சொற்கள் கொட்டிக் கிடக்கின்ற போது அதை விடுத்து வேதனை தரும் கடுஞ்சொற்களை ஏன் கூற வேண்டும் ? கனியும் கனிகளை விடுத்து கசக்கும் காய்களைத் தேடி உண்பது அறியாமையன்றோ ! இன்சொல் பேசுக !! வன்சொல் பேசற்க !!

செல்வி ஷங்கர்
--------------------

Thursday, May 22, 2008

தீர்ப்பா தீர்வா ??

தடயமே இல்லாத நிகழ்வுகள்
நினைவே இல்லாத நிகழ்ச்சிகள்
நம்பிக்கை இல்லாத நடைமுறைகள்
இயந்திரங்களோடு இயங்கும் நாள்கள்
இதயங்களோடு சுமைகள் என்று
வாழ்வது தான் வாழ்க்கை என்றால்
வாய்ப்புத் தர வேண்டாமா ? மனத்திற்கு !!

செல்வி ஷங்கர்
--------------------



தவம்

சோகம் எனக்கு சுகந்தம்
சுமைகள் எனக்கு வசந்தம்
தேடல் எனக்கு ஊடகம்
ஏக்கம் எனக்கு ஊக்கம்
தேக்கம் எனக்கு படிப்பினை
தெரிந்தால் அது இனிமை
தெரியாவிட்டால் புதுமை
இல்லாத பொறுமையே இருப்பிடம்
இயங்காத செயல்கள் ஏற்பிடம்
எப்படியும் ஒரு நாள் மாறும்
நம்பிக்கை தான் ........ தவம் !

செல்வி ஷங்கர்
---------------------

Monday, May 19, 2008

கோடையில் குளிர்ந்த மாலைப் பொழுது

கொட்டிய மழை
ஓடி மறைந்தது !

வெள்ளம் வடிந்த
சாலை ஓரம்
நிமிர்ந்த கிளைகள் !

ஓடிய பறவை
ஓய்ந்து நின்றது !

புதுமை ஒளியில்
புறம் நனைந்த
ஓட்டு வீடுகள் !

மின்வெட்டில்
பளிச்சிடும்
வண்டிவிளக்குகள் !

மின்னல் ஒளியில்
எட்டிப் பார்த்தால்
ஏதோ ஓரின்பம் !

கோடை வெயிலில்
குளிர்ந்த மாலைப்பொழுது !
குனிந்து குனிந்து
சின்னஞ் சிறுவர்
சிரித்து ஓடினர்
சிறிய பூக்கள்
நீரில் மிதந்தன !

செல்வி ஷங்கர்
-------------------

நேற்றுப் பெய்த மழை

சுற்றி அடித்தது காற்று
சுழற்றி அடித்தது கிளை !
கொட்டி முடித்தது மேகம்
கூவி அழைத்தது மழையை !

நனைந்து பறந்தது பறவை
மறைந்து நின்றது கிளையில் !
காற்றில் பறக்குது மழைநீர்
சாலை மறைத்தது வெள்ளம் !

சாய்ந்து ஆடின மரங்கள்
ஓடி நின்றன வண்டிகள்
ஓரம் போயினர் மக்கள்
மழையின் இடையே கால்கள்
மறைத்து மறைத்து மழலை !

செல்வி ஷங்கர்
--------------

Monday, May 5, 2008

மாற்றம்

காலைக்கு மாலை மாற்றமா ?
இல்லை !
கடலுக்கு மலை மாற்றமா ?
வேலைக்கு ஓய்வு மாற்றமா ?
இல்லை !
வேதனைக்கு சோதனை மாற்றமா ?
நினைவிற்கு நிகழ்வு மாற்றமா ?
இல்லை !
கனவிற்கு கற்பனை மாற்றமா ?
காலத்தின் மாற்றங்கள் பற்பல
அவை இயற்கையின் காவியங்களே !

குருவிக்கூடு

எண்ணப் பறவைகள்
எப்போதும் சிறகடிக்கும்
சிந்தனைகள் சிக்கித்
தவித்தாலும் சிதறல்கள்
தாவித்தான் செல்லும் !

சிறிசுகளைப் பெருசாக்க
பட்டிருக்கும் பாடெல்லாம்
படமாய் ஓடுகிறது
பாடமாய்த் தெரிகிறது
மனத் திரையில் !

கையில் பெட்டி
கால்கள் எப்போதும்
ரயிலடியில் ! காலம்
சக்கரமாய்ச் சுழன்றது
கேரளக் கரையில் !

பதிவஞ்சல் இடங்களே
புறப்படும் நேரமும்
வருகை காலமும்
மனத்தில் நடமாடக்
காலம் ஓடும் !

ஓயாத உழைப்பும்
ஒன்று சேராத
செலவும் நீராய்
சேர்ந்தோடும் நினைவு
அலைபாயும் ! நீண்ட
வெளியில் நிழலாடும் !

ஒன்றா இரண்டா
எதிர்பார்க்கும் உள்ளங்கள்
சிறுவனுக்குக் கால்சட்டை
சிறிது வளர்ந்தவனுக்கு
பள்ளிக் கட்டணம்
பாதியில் பள்ளியை
பறக்கவிட்ட பையனுக்கு
பதிவான இருப்பிடம் !

இளைய வயதில்
எதிர்காலக் கனவில்
கல்லூரிப் படிப்பை
பாத்திகட்டிய பையனுக்கு
படியேற்ற முயற்சி !

படிப்பை முடித்து
பதிவெழுத்தைப் பயின்று
பணிபார்க்கும் தம்பிக்கு
பணியக முதலீடு !

பத்துப்பேர் தவிக்கும்
பாசக் குடும்பத்தின்
பசியாற வழி !

இத்தனைக்கும் இடையில்
இருப்பதற்கு ஒர்வீடு
செங்கலாய் சிமிண்டாய்
மணலாய் மரமாய்
கம்பியாய் கருங்கல்லாய்
காசுகள் சில்லறையில் !

ஒன்றொன்றாய்
முகம்பார்க்கும்
தாயும்சேயும் !
அத்தனையும்
கையில் மறைத்து
காலங் கலங்க
கடைத்தேறி
நிமிர்கையில்
வாழவும் ஆசை !
வாழ்க்கைத் துணையின்
ஓசை ! வளரும்
பிஞ்சுகளின் பார்வை !

காலம் பறந்தது
உழைத்த கரங்களில்
உறுதி மட்டுமே
உழைப்பின் பரிசு !
இன்னும் ஒடுகிறது
கால்கள் ! இன்பத்தை
ஒருபுறம் ஒதுக்கி
ஓரமாய் வைத்து
ஒருபுன்னகை !

புதியபாதையில்
மறுபடியும் ஒரு
குருவிக்கூடு !

செல்வி ஷங்கர்
---------------------















Thursday, April 10, 2008

இரண்டு மனம் !

தவத்திற்கு ஒருவர்
தமிழுக்கு இருவர்
இதை நினைக்கும் போதெல்லாம்
தனியாய்ப் பேசினால் ! எப்படி இருக்கும்
என்ற எண்ணம் தான் அடிக்கடி தோன்றும்.
சொல்லாத சொல்லும் சொல்லிவிட்ட சொல்லும்
அர்த்தமற்றது தான் - புரிந்து கொள்ளாத வரையில்
என்ற எண்ணச்சிறகும் பறக்கும் !

இரண்டாயிருப்பதில் இன்பம் உண்டு !
தனிமை நம் தனித் தன்மையைக் கொன்று விடும்.
பதவியில் இரண்டு ! பணியில் இரண்டு !
வாழ்க்கையும் இரண்டு ! வாழ்க்கை மலர்கள் இரண்டு !
அவை இரண்டு பாடங்களைச் சொல்லித் தந்தன.
ஒன்றாய் இருப்பது ( ஒற்றுமை) இன்பம் !
ஒளியின் சேர்க்கை இரண்டு தானே !
இல்லை எனில் காயேது கனியேது ?
கண்ணின் மணிகள் இரண்டு தான் !
மணியின் கண்களும் இரண்டு தான் !
அவை மனத்தில் மணக்கும் மயக்கம் !
ஒன்றென்ற உணர்வு ( தனிமை ) ஓடிப்போகும் !
நெஞ்சம் உவப்பாய் இருக்கும் !
எட்டிப் பார்க்கும் போதெல்லாம்
தொட்டுப் பார்க்கும் தொட்டில் குழந்தை போல்
துவண்டு போகும் மனம் !!!
துள்ளித் திரியும் மனம். !!!!

---------------------------------------

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

இரண்டடியில் இன்பம் !

இன்பத்தைத் துன்பத்தை
ஏற்றத்தை இறக்கத்தை
உயர்வைத் தாழ்வை
உணர்வை உரிமையை
அன்பை அருளை
அடக்கத்தை ஒழுக்கத்தை
கல்வியை கல்லாமையை
செயலை பயனை
செப்படி வித்தையாய்
செதுக்கிய சிற்பி !!!

மனைவியை மக்களை
வாழ்வை இன்பத்தை
மனத்தை மகிழ்வை
நட்பை சுற்றத்தை
முயற்சியை வெற்றியை
அரசனை அமைச்சனை
பகையை படையை
நாட்டை மக்களை
உழவனை உணவை
உணர்த்திய வேந்தன் !!!

காலத்தை இடத்தை
செயலை வலிமையை
ஊக்கத்தை ஆக்கத்தை
உள்ளத்தை உணர்ச்சியை
பொன்னைப் பொருளை
செய்யும் முறையை
புவியைப் புகழை
புனிதமாய்க் காட்டிய
மனித தெய்வம் !!

இரண்டே அடியில்
உலகை அளந்த
உயர் பண்பாளன் !!
இரண்டாய்க் கண்ட
உலகில் இறையை
மட்டும் ஒன்றாய்க்
கண்ட உத்தமன் !!

இவனே எந்தன்
இசைத்தமிழ் வேந்தன் !!
இரண்டாம் தமிழின்
இலக்கணம் தந்த
இயற்றமிழ் புலவன் !!
மூன்றாம் தமிழாய்
வாழ்வைக் காட்டிய
முனிவன் !! தமிழ்மறை
தந்த தத்துவன் !!!
-----------------------------------
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

செல்வி ஷங்கர்

9 : விருந்தோம்பல்

01. பொருளீட்டி நாம் மனைவி மக்களுடன் மகிழ்வாய் வாழ்வதெல்லாம் நம் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் வரவேற்று உதவி செய்வதற்கே ! வாழ்க்கை விருந்தில் மகிழும்.

02. நாம் விருந்தினரை வெளியே நிறுத்தி விட்டு தனித்து உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கதன்று. விருந்தை விடுத்து நாம் மட்டும் உண்பது விடமே ஆகும்.

03. நாளும் வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்புடன் உண்பித்து உதவி செய்பவன் வாழ்க்கையில் வறுமை என்பதே இல்லை. இல்லாமை கூட அவன் செயலில் இனிமையாகி விடும்.

04. அகமும் முகமும் மலர விருந்து போற்றுபவன் இல்லத்தில் செல்வத் திருமகள் மனம் மகிழ்ந்து வீற்றிருப்பாள். செல்வச் செழிப்பு செயலாய் வெளிப்படும்.

05. விருந்தினரை வரவேற்று உணவளித்து அன்பு வாழ்க்கை நடத்துபவன் நிலத்துக்கு விதை விதைக்காமலே பயிர் விளையும். அன்பை விதைத்தால் அகிலம் வாழும்.

06. தன் வீட்டிற்கு வந்த விருந்தினரை வரவேற்று வழி அனுப்பி, இனி வரும் விருந்தினரை எதிர் நோக்கிக் காத்திருக்கும் மனம் படைத்தவன் வானுலகத் தேவர்கள் வரவேற்கும் விருந்தாவான்.

07. விருந்தோம்பலின் பயன் இத்தகையது என்று அளவிட முடியாது. அது ஓர் தவம். அத்தவத்தின் அளவு நாம் வரவேற்கும் விருந்தின் தனமையைப் பொறுத்தது. அன்பும் இன்சொல்லும் விருந்தை இனிமையாக்கும். நம் மனத்தை மென்மையாக்கும்.

08. பொருட்பயனை அடைய விரும்புவோர் விருந்தினைப் போற்றுவர். அவ்வாறு விருந்து போற்றாதவர்கள் வருந்திப் பொருள் சேர்த்தும் பயனில்லை. செல்வத்துப் பயனே ஈதல்.

09. விருந்து போற்றுதலே அறம். இதனை அறியாதார் அறியாதாரே ! பெருஞ் செல்வராயினும் விருந்து போற்றாதவர் வறியவரே ! செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்.

10. விருந்தினர் மிக மென்மையானவர்கள். அவர்களை இனிமையாய் நோக்க வேண்டும். அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தால் வாடும். ஆனால் விருந்தினரோ முகம் மாறுபட்டு நோக்கினாலே மனம் வாடி விடுவர். மலரினும் மெல்லிது அன்பு மனம்.

தொடரும் .....






05